Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

கரோனா தொற்று பாதிப்பால் ஒரேநாளில் 2 மருத்துவர்கள், பெண் செவிலியர் உயிரிழப்பு: மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மரணம்

கும்பகோணம்/குடியாத்தம்/தஞ்சாவூர்

கரோனா தொற்று பாதிப்பால் கும்பகோணத்தில் ஒரேநாளில் 2 மருத்துவர்களும் குடியாத்தத்தில் பெண் செவிலியர் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். மேலும், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணனும் நேற்று உயிரிழந்தார்.

கும்பகோணம் சாந்தி நகரில்நீரிழிவு சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வந்தவர் மருத்துவர் சித்தார்த்தன்(52). தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைஅடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்தார்த்தன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்

அதேபோல, கும்பகோணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீம்(75). காது,மூக்கு, தொண்டை மருத்துவரான இவர், ஆயிகுளம் எதிரே மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல்காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அப்துல்அஜீம் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி, கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடியாத்தத்தில் செவிலியர் மரணம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி எழிலரசி (40). இவர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட எழிலரசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எழிலரசியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே, வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எழிலரசி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். எழிலரசியின் உடல் பேரணாம்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

துரை.பாலகிருஷ்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரைச் சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன்(75). மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.

மே 22-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல், தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவியும், மகள், மகன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x