Last Updated : 24 May, 2021 12:51 PM

 

Published : 24 May 2021 12:51 PM
Last Updated : 24 May 2021 12:51 PM

மலர்கள் மலர்ந்தும் விலை கிடைக்காமல் உதிரும் கிராம விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வாழ்வு: உரிய நிவாரணம் தருமா புதுச்சேரி அரசு?

கிராமப் பகுதிகளில் செடிகளைக் காக்க பூக்களைப் பறிக்கும் விவசாயிகள்.

புதுச்சேரி

மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மலர்களை விற்க முடியாமல் செடியைக் காக்க, அதிலிருந்து மலர்களைப் பறித்துக் கீழே கொட்டும் அவலம் புதுச்சேரி கிராமப் பகுதிகளில் நிலவுகிறது. விளைந்தும் பயனில்லை என விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். சிலரோ மலர்ச் செடிகளை வெட்டிவிடும் சூழலும் நிலவுகிறது.

புதுச்சேரி அருகே கிராமப் பகுதிகளான திருக்கனூர், வம்புபட்டு, சோமப்பட்டு, குமாரப்பாளையம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்துக் கடைகளும் காலை 12 மணி வரை மட்டுமே புதுச்சேரியில் இயங்குகின்றன. இதனால் மலர் விற்பனை நிலையங்களும் குறைந்த நேரமே இயங்குவதுடன், வாங்குவோரும் அதிகமில்லாததால் விலை சரிந்துள்ளது.

கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறுகையில், "மலர்களை விவசாயிகள் பறித்து புதுச்சேரி, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு அனுப்புவோம். கரோனா காலம் என்பதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கரோனாவுக்கு முன்பு கனகாம்பரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், மல்லி அரும்பு ரூ.400க்கும், சம்பங்கி ரூ. 150க்கும் விற்றது.

ஒரு கிலோ பூ பறிக்க ரூ.60-ஐ தொழிலாளர்களுக்குத் தருவோம். தற்போது விலையும் கடுமையாகக் குறைந்துள்ளது. சம்பங்கி கிலோ ரூ.6க்கும், பட்ரோஸ் கிலோ ரூ. 10க்கும், குண்டுமல்லி, அரும்பு ரூ.30க்கும், கனகாம்பரம் ரூ.100க்கும் என விலை சரிந்துள்ளது. முந்தைய விலையை விட கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பறித்து மார்க்கெட் கொண்டு வந்தாலும் வியாபாரிகள் வாங்குவதில்லை" என்கின்றனர்.


உரிய விலை இல்லாததால் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள பறித்த பூக்கள்

ஏராளமான விவசாயிகள் பூவைப் பறித்துக் கொட்டத் தொடங்கியுள்ளனர். இதுபற்றி விவசாயிகளிடம் விசாரித்ததற்கு, "பல ஏக்கரில் பூக்களைப் பயிரிட்ட பலரும் செடியில் விளைந்த மலர்களைப் பறித்துக் கொட்டிவிடுகிறார்கள். சிலர் உரமாக்குகிறோம். செடியிலேயே மலர்கள் இருந்தால் அந்தச் செடி வீணாகிவிடும் என்பதால் மலர்களைப் பறிக்கிறோம். மலர்களைப் பறிக்க கூலி விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்க முடியாமல் பலரும் அந்தச் செடியையே வெட்டிவிடும் சூழலும் நிலவுகிறது. அரசு இதைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் தர வேண்டும்" என்றனர்.

பூ விவசாயத்தில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகள் கூறுகையில், "பூ அறுவடை செய்யும் கூலித் தொழிலாளர்கள் கிராமங்களில் ஏராளமானோர் உண்டு. தினந்தோறும் ரூபாய் 200 கிடைத்து வந்தது. அது தற்போது கிடைக்கவில்லை. அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x