Published : 23 May 2021 12:13 PM
Last Updated : 23 May 2021 12:13 PM

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 கரோனா நோய் எதிர்ப்பு மருந்துப் பெட்டகங்கள் வழங்கிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மருந்துப் பெட்டகங்கள் மாநகராட்சிப் பகுதிக்கு 15000மும், ஊரகப் பகுதிக்கு 5000மும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மருந்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு கொடுத்து துவக்கிவைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், கோ.தளபதி, பூமிநாதன்,டி.வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பெற்று கடந்த 5 நாட்களில் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் மாநகராட்சியின் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நல பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

இதில் கடந்த 5 நாட்களில் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மண்டல மருத்துவ அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மூலமாக நகர்ப்புற சுகாதார செவிலியர்களைக் கொண்டு அவரவர் வீட்டிலேயே நேரடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

மேலும், நாளை முதல் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு வகைப்படுத்துதல் மையத்திற்கு வந்து மருத்துவர் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப்பெறுபவர்களுக்கு வகைப்படுத்துதல் மையத்திலேயே மருந்துப் பெட்டகம் வழங்கப்படும்.

நோய்தொற்று கண்டறியப்பட்டு ஓரிரு நாளில் மருந்து பெட்டகம் கிடைக்கப்பெறவில்லையெனில் 7305024653, 7305024658 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் முன்களப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நலப் பணியாளர்களுக்கும் மண்டல சுகாதார அலுவலர்கள் மூலமாக மருந்துப் பெட்டகம் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x