Published : 22 May 2021 04:21 PM
Last Updated : 22 May 2021 04:21 PM

வெளியூர் செல்ல இன்றும் நாளையும் சென்னையிலிருந்து 1500 பேருந்துகள்; தமிழகம் முழுவதும் 3000 பேருந்துகள்: அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் 2 நாட்கள் தளர்வு அறிவிக்கப்பட்டு, வெளியூர் செல்லப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 1500 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் 3000 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:

“கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முதல்வர் கடந்த 10-05-2021 முதல் 24-05-2021 வரையில் இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்திட உத்தரவிட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

மேலும், கரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தினைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, தமிழ்நாடு முதல்வர் வரும் மே 24 காலை முதல் அடுத்த ஓரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்றும் (22-05-2021) நாளையும் (23-05-2021) அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் (மே.22 மற்றும் மே.23) பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இரு நாட்களுக்கு 1500 பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் கூடுதலாக வரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்புப் பேருந்துகளும் முழுமையாக இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மே.23 (ஞாயிறு) அன்று கடைசியாகப் புறப்படும் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புறப்படும் இடம் - சேரும் இடம் - நேரம்

சென்னை - மார்த்தாண்டம் - மாலை 6 மணி

சென்னை - நாகர்கோவில் - மாலை 7 மணி

சென்னை - தூத்துக்குடி - மாலை 7 மணி

சென்னை - செங்கோட்டை- இரவு 7.30 மணி

சென்னை - திருநெல்வேலி - இரவு 8. மணி

சென்னை - திண்டுக்கல் - இரவு 8 மணி

சென்னை - மதுரை - இரவு 11.30 மணி

சென்னை - திருச்சி - இரவு 11.45 மணி

இயக்கப்படுகின்ற சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய்த் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் போன்றவற்றைப் பின்பற்றியே இயக்கப்படும். இதனைப் பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினைப் பயன்படுத்திக் கொண்டு, பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தினையும் பின்பற்றி தங்கள் சொந்த இடங்களுக்குப் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாக, மாநகரப் பேருந்துகள் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்தும் இயக்கப்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x