Published : 04 Dec 2015 06:27 PM
Last Updated : 04 Dec 2015 06:27 PM

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகள் பேரிடர் பகுதியாக அறிவிக்கும் நிலைக்கு சென்றது. சென்னை மாநகர் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட கோடி மாவட்டங்களுக்கு கனமழை ஆபத்து நீங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தின் அனேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை, கடலூரில் 9, புதுச்சேரியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. கனமழையை பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு இல்லை. மத்திய மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, காரைக்கால்லில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில புகுதிகளில் மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x