Last Updated : 19 May, 2021 03:48 PM

 

Published : 19 May 2021 03:48 PM
Last Updated : 19 May 2021 03:48 PM

காவிரி டெல்டாவில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றைத் தூர்வார ரூ.65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவில் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மூலம் தண்ணீர் பாய்ந்து பாசன வசதியை ஏற்படுத்துகின்றன. இதில் ஆறுகள், வாய்க்கால்கள் அவ்வப்போது தூர்ந்து போவதாலும், செடி கொடிகள் படர்ந்து தண்ணீர் சீராகச் செல்லத் தடையாக இருப்பதாலும் ஆண்டுதோறும் தூர்வாரும் பணி தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் உள்ள மதகுகள், நீரொழுங்கிகள், தடுப்புச் சுவர்கள், சாய்வு தளங்கள் ஆகியவையும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும் முன் தூர்வாரும் பணியை மேற்கொள்ள ஏதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, கடந்த 16-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தூர்வாரும் பணி முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன் தூர்வாரும் பணிக்கான அரசாணையைத் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால், வடிகால்கள் ஆகியவை தூர்வார, திருச்சி மாவட்டத்தில் 63 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 162.81 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் 10 பணிகள், 60.60 கி.மீ. நீளத்துக்கு ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள், 123.65 கி.மீ. நீளத்துக்கு ரூ.7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள், 1,169.14 கி.மீ. நீளத்துக்கு, ரூ.20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள் 1,282.35 கி.மீ. தூரத்துக்கு 16.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 89 பணிகள் 574 கி.மீ. தூரத்துக்கு ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள் 460.85 கி.மீ. நீளத்துக்கு ரூ.5.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிகள் 25.54 கி.மீ. நீளத்துக்கு ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர் மாவட்டத்தில் 58 பணிகள், 202 கி.மீ. நீளத்துக்கு ரூ.2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள், 4,061 கி.மீ. நீளத்தில் ரூ.65 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விரைவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, தூர்வாரும் பணிகளை உடனடியாகத் தொடங்கி, ஜூன் மாதம் ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் முடிக்கப் பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுச் செயலாற்றி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x