Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு

அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனிருந்து கவனிக்க, அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கவனித்துக் கொள்ள, உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். இந்நிலையில் நோயாளிகளுடன் இருப்பவர் பொது இடங்களுக்கு எளிதில் செல்லக்கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கும் பரவக்கூடியதாக இருக்கிறது. இதனால், நோயாளிகளுடன் உறவினர்களை இருக்க அனுமதிக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுடன் இருக்க உறவினர்களுக்கு அனுமதியில்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால், நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்ள ஒரு உறவினருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அந்த அனுமதிச் சீட்டை வைத்துக் கொண்டு வேறு சில உறவினர்களும் வந்து செல்கின்றனர். இவர்கள் வெளியே சென்று சமுதாயத்தில் தொற்றை பரப்பக் கூடியவர்களாக உள்ளனர்.

இதனால், சுகாதாரத் துறை அறிவுறுத்தல்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்க உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே வேளையில், தீவிர சிகிச்சை மற்றும் உதவி தேவைப்படும் கரோனா நோயாளியின் உறவினர்களை முழு உடற்கவசம் அளித்து அனுமதித்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x