Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

வாணியம்பாடியில் நிவாரண தொகை வழங்கச்சென்ற அதிமுக எம்எல்ஏவிடம் திமுகவினர் வாக்குவாதம்

வாணியம்பாடி நியாய விலை கடையில் நிவாரண தொகை வழங்கச்சென்ற அதிமுக எம்எல்ஏவிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகேயுள்ள நியாய விலைக்கடையில் கரோனா நிவாரண நிதியை வழங்கச் சென்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரை, திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புல்லூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் கரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்காக வாணி யம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் (அதிமுக) நேற்று காலை சென்றார்.

அப்போது, அங்கு வந்த திமுகவினர் அவரை நிவாரண நிதி வழங்கக்கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தியதால், இரு கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திமுகவினர் இடையே பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், நான் மக்கள் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் எனக்கூறினார். இருப்பினும், திமுகவினர் தொடர்ந்து வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்டதால் கரோனா நிவாரண நிதியை வழங்குவதை பாதியில் நிறுத்திவிட்டு அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

அதேபோல், வாணியம்பாடியில் மற்றொரு நியாய விலைக்கடையில் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் கரோனா நிவாரண நிதி வழங்கி விட்டு சென்ற பிறகு அங்கு சென்ற ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், ‘நாங்கள் வருவதற்குள் எப்படி அதிமுக எம்எல்ஏவை வைத்து நிவாரணத்தொகை வழங்கலாம், நான் ஜோலார்பேட்டை தொகுதிக்கு மட்டும் அல்ல, 4 தொகுதிகளுக்கும் நான் மாவட்டச்செயலாளர். எனவே எனது தலைமையில் தான் இனி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவி நேற்று வைரல் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x