Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

தமிழக அரசு உத்தரவின்படி சென்னையில் 1,000 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை

தமிழக அரசு உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் 1,000 மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்க 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.

மற்றொருபுறம், கரோனா அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், மாநகரப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தமிழகத்தில் அனைத்துப் பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும், கட்டணமின்றியும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இன்று (மே 8) முதல் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் முழு விவரம்

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பேரிடர் காலத்திலும் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் சுமார் 3,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள பேருந்துகளில் சுமார் 1,000 பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு உத்தரவின்படி, சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இருப்பினும், தமிழகம் முழுவதும் எவ்வளவு பேருந்துகள், எந்தெந்த வழித்தடங்களில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என்பன உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’’ என்றனர்.

இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x