Published : 18 Dec 2015 09:59 AM
Last Updated : 18 Dec 2015 09:59 AM

‘அட்வைஸரி கமிட்டி’ முன்பு அட்டாக் பாண்டி ஆஜர்

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டி, சென்னையில் அட்வைஸரி கமிட்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட தேடலுக்குப்பிறகு அட்டாக் பாண்டியை மும்பையில் போலீஸார் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை போலீஸ் கமிஷனர் கடந்த நவம்பர் 17-ம் தேதி உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவரை 49 நாட்களுக்குள் சென்னையில் உள்ள அட்வைஸரி கமிட்டி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அதன்படி, அட்டாக் பாண்டியை நேற்று சென்னை அழைத்து வந்த போலீஸார், அட்வைஸரி கமிட்டி தலைவர் முன்னாள் நீதிபதி ஏ.ராமன், உறுப்பினர்களான முன்னாள் நீதிபதிகள் டி.வி.மாசிலாமணி, ஆர்.ரெகுபதி ஆகியோரைக் கொண்ட குழு முன்பு ஆஜர்படுத்தினர். அவருடன் அவரது மனைவி தயாளுவும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அட்டாக் பாண்டி, ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போலீஸார் பல பொய் வழக்குகளை போட்டுள்ளனர். அதில் இதுவும் ஒன்று.

எனக்கு ஜாமீன் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே போலீஸார் அவசர கதியில் என் மீது குண்டர் சட்டத்தை போட்டுள்ளனர். அதற்கான ஆதாரங்களை அட்வைஸரி கமிட்டியிடம் சுட்டிக் காட்டினேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x