Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு: ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கிறது

ரங்கசாமி

புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக இன்று, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பதவியேற்கிறார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றன. இக்கூட்டணி பெரும்பான்மை பெற்றதால் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். புதிய ஆட்சி அமைப்பதற்காக கடந்த 3-ம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரை சந்தித்தனர். அப்போது என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை கோரினார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜெயபால், கட்சி நிர்வாகி பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து மே 7-ம் தேதி பிற்கபல் 1.20 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பதற்கான கடிதத்தை வழங்கினர்.

துணை நிலை ஆளுநர் அதை ஏற்றுக்கொண்ட நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே உள்ள காந்தி திடலில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு, கடற்கரை காந்தி திடலில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெறும் எளிய விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் 20-வது முதல்வராக ரங்கசாமி இன்று (மே.7) பிற்பகல் 1.20 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இதுதொடர்பாக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இருந்து அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில், விழாவுக்கு பங்கேற்க வருவோர் அழைப்பிதழை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளி மற்றும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக கரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x