Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மரக்கூண்டில் அடைக்கப்பட்டது ‘ரிவால்டோ’ யானை: மயக்க ஊசி செலுத்தாமல் பிடித்த வனத் துறையின் புது முயற்சி வெற்றி

மசினகுடி

மசினகுடியில் மூச்சுவிட சிரமப்பட்டு வரும் ரிவால்டோ யானை சிகிச்சைக்காக கரால் எனும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றிவரும் ரிவால்டோ யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு நுனிப்பகுதி துண்டானது. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் யானை சிரமப்பட்டு வருகிறது.

இரை தேட சிரமமாக இருப்பதால், ரிவால்டோ எளிதில் உணவு கிடைக்கும் குடியிருப்பு பகுதிகளில் வலம் வர தொடங்கியது. யானையின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு மக்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர். இதனால், யானையை சிகிச்சைக்காக முதுமலைக்கு அழைத்துச் செல்ல வனத் துறையினர் முடிவு செய்து, வாழைத் தோட்டத்தில் இருந்து வன ஊழியர்களின் உதவியுடன் பழங்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் இரவு பகலாக கவனமாக யானையை அழைத்துச் சென்றபோது, திடீரென யானை வனத் துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியது. இதனால், வனத் துறையினரின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து வனத் துறையினர் வாழைத் தோட்டம் பகுதியில் மரக் கூண்டு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், ரிவால்டோவை முகாமுக்கு கொண்டு செல்லக் கூடாது என வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலால் ரிவால்டோவை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கும் வனத் துறையினரின் முயற்சி கைவிடப்பட்டது. இதனால், ரிவால்டோ மீண்டும் வாழைத் தோட்டம், மசினகுடி குடியிருப்பு பகுதிகளிலேயே வலம் வந்தது. யானை சிரமப்பட்டு வருவதால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத் துறை முன் வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து ரிவால்டோவுக்கு சிகிச்சை அளிக்க அதை மரக்கூண்டில் அடைக்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாத நிலையில், என்ன செய்யலாம் என யோசித்த வனத் துறையினர், வாழைத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மரக்கூண்டுக்குள் ரிவால்டோ தானாகவே செல்ல, அதற்கு பழங்களைக் கொண்டு பழக்கப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பழங்களை உண்பதற்காக ரிவால்டோ மரக்கூண்டுக்குள் வர வனத் துறையினர் அதை கூண்டில் அடைத்தனர். அதன் நடவடிக்கையை கண்காணித்து, அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ரிவால்டோ யானைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை பிடித்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்புதிய முயற்சி வெற்றிகரமாக அமைந்ததையொட்டி, யானையின் நடவடிக்கையை கண்காணித்து, அதற்கு நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசித்து, சிகிச்சை அளிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x