Published : 05 May 2021 04:01 PM
Last Updated : 05 May 2021 04:01 PM

நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கக்கோரி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்; நிர்வாகம் உறுதியளித்தபின் வாபஸ்

நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கக்கோரி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1,500-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள 480 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில், நேற்று (மே 04) இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பற்றாக்குறையை அடுத்து ஆக்சிஜன் அளவை குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில், கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறுகையில், "நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால், இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், "ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால், முறையாக எங்களால் நோயாளிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தர முடியவில்லை. அதனால் உடனடியாக ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்த்து, நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்" என, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இன்று (மே 05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நிலையில், வேறு மாவட்டத்திற்கு மருத்துவர்களை மாற்றுவது மிகவும் அபாயகரமானது என்று கூறி முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் ஏராளமான இளம் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்

இதையடுத்து, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை சரிசெய்வதாகவும், தினந்தோறும் ஆக்சிஜன் பற்றாக்குறை இன்றி வழங்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததன் பேரில், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x