Published : 21 Dec 2015 08:39 AM
Last Updated : 21 Dec 2015 08:39 AM

சகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரக்கோரி சென்னையில் இளைஞர்கள் பேரணி

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

நேர்மையான செயல்பாடுகளின் மூலம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மதுரை கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான வழக்கில் சகாயத்தை சட்ட ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரும் தீவிரமாக விசாரணை நடத்தி, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்தச் சூழலில் தமிழகத்தில் ஊழலை போக்கவும், நேர்மையான நிர்வாகத்தை அமைக்கவும் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி இலக்கு இளைஞர்கள் அமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே காலை 10 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.

புதியதோர் உலகு செய்வோம், சகாயம் எங்கள் முதல்வர், கரத்தை கோர்த்து மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்பன போன்ற கோஷங்களை பேரணியில் இளைஞர்கள் எழுப்பினர். சகாயத்துக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x