Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடைபெறுகிறது. மேலும் இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், அதில் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
இதேபோல் ஆபாச பதிவுகள், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகளும் அதிகரித்தன.
இது தொடர்பான புகார்களை சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணி காரணமாக சைபர் கிரைம் தொடர்பான புகார்களை விசாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நிலுவையில் உள்ள சைபர் கிரைம் தொடர்பான புகார்களை விரைந்து முடிக்கவும், சம்பந்தப்பட்ட வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல் மாவட்ட துணை ஆணையர்களுக்கும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT