

புதுச்சேரியில் புதிதாக 799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,160 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 848 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே 3) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,333 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 650, காரைக்கால் - 51, ஏனாம் – 73, மாஹே - 25 பேர் என மொத்தம் 799 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 12 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 62 ஆயிரத்து 160 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,866 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,748 பேரும் என மாநிலம் முழுவதும் 10,614 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 790 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 698 (81.56 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 877 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 45 ஆயிரத்து 430 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 1,730 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.