Published : 03 May 2021 03:56 PM
Last Updated : 03 May 2021 03:56 PM

கரோனா கொடுமையை எதிர்த்து மகத்தான போராட்டத்தை ஸ்டாலின் நடத்துவார்: கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை

கே.பாலகிருஷ்ணன் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கரோனா கொடுமையை எதிர்த்து ஒரு மகத்தான போராட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்துவார் என, கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமருகிறது.

இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (மே 03) ஒவ்வொருவராகச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று விரைவில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம்.

திமுக ஆட்சி அமைகிறபோது, தமிழகம் இன்றைக்கு சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் கரோனா கொடுமையை எதிர்த்து ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தி நிச்சயமாக இந்த கொடுமையிலிருந்து மக்களை மீட்கும் காரியத்தில் மு.க.ஸ்டாலின் அரும்பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை நிச்சயம் எங்களுக்கு உண்டு" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x