Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
தமிழகம் முழுவதும் உள்ள மரங்களை பாதுகாப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
வனப் பாதுகாப்புச் சட்டம், காற்றுமாசு தடுப்புச் சட்டம், நீர் மாசு தடுப்புச்சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் என பல சட்டங்கள் இருந்தாலும் தமிழகத்தில் மரங்களைப் பாதுகாக்க தனியாக எந்த சட்டமும் இல்லை. ஆனால் கர்நாடகா, டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்றமாநிலங்களில் மரங்களை பாதுகாக்க பிரத்யேக சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களின்படி தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் என்றாலும் மரங்களை வெட்ட வேண்டும் என்றால் அந்த அதிகாரியின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அரிதாகும் அரிய மரங்கள்
ஆனால், தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க தனியாக சட்டம் இல்லாததால், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக அரிய வகை மரங்கள்கூட அரிதாகி வருகின்றன. தமிழகத்தில் மரங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என அறிவித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையிலும் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே தமிழகத்தில் மரங்களை பாதுகாக்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலர், நகராட்சி நிர்வாகத் துறை, பொதுப்பணித் துறை செயலர்கள் மற்றும் டிஜிபி ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மரங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து, உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT