Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள், 3 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன. கொளத்தூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் இருப்பதால், அதன் முடிவு வெளியாக 20 மணி நேரம் ஆகும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் உள்ளவாக்கு எண்ணும் மையத்திலும்,விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ராணி மேரி கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3 வாக்கு எண்ணும் மையங்களிலும் சுமார் 4 ஆயிரம் முகவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்றுபரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியில்1,066 அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தியாகராய நகரில் 14 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால் 14 மணி நேரத்தில் முடிவு வெளியாகும்.
கொளத்தூர் தொகுதியில் 36 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 14 மேசைகளில் 30 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முடிவு தெரியவர சுமார் 20 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி பி.ஆகாஷ் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT