Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

உ.பி. முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி புகார்

ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன்தட்டுப்பாடே இல்லை என்றும், அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும்எச்சரித்திருந்தார். இதுதொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், ‘பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ, யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக தொண்டர்கள் ட்விட்டரில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பாஜக நிர்வாகி ஆனந்தன் என்பவர், உ.பி. முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ‘உத்தர பிரதேச முதல்வரை மிரட்டும் வகையில் சித்தார்த் கருத்து தெரிவித்ததாகவும், தீவிரவாத செயலை தூண்டியதாகவும்’ புகாரில் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் இணையத்தில் பரப்பி விட்டுள்ளனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசும் நபர்கள், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் சித்தார்த் தனது ட்வீட்டை டேக் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x