Last Updated : 30 Apr, 2021 03:13 AM

 

Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பு; வடமாநிலங்களுக்கு செல்லும் தேங்காய்கள் தேக்கம்: விலை வீழ்ச்சியால் வாழப்பாடி வியாபாரிகள் வேதனை

கரோனா தொற்று பரவல் காரணமாக வாழப்பாடியில் இருந்து மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாததால், விலை வீழ்ச்சியடைந்திருப்ப தாக வாழப்பாடி வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேங்காய் மொத்த விற்பனையில் தமிழக அளவில் முக்கிய இடங்களில் ஒன்றாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மண்டிகளில் தேங்காய் மொத்த வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி, ராசிபுரம் என சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து வியாபாரிகள் மூலம் மண்டி உரிமையாளர்கள் நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து வருகின்றனர்.

வாழப்பாடி மண்டிக்கு வரும் தேங்காய்களை, தொழிலாளர்கள் மூலம் மட்டைகளை உரித்து, லாரிகளில் வட மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

தற்போது, வட மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தேங்காய் விற்பனை 25 சதவீதமாக குறைந்துள்ளதாக மண்டி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு லாரிகளில் மாதம் 25 லோடு தேங்காய் அனுப்பி வந்த நிலையில், கரோனா தொற்றுகாரணமாக, கடந்த 2 மாதமாக, மகாராஷ்டிராவுக்கு தேங்காய் அனுப்ப முடியவில்லை என மண்டிஉரிமையாளர்கள் தெரிவித்தனர்.இதனால், விலை வீழ்ச்சியடைந்திருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வாழப் பாடியைச் சேர்ந்த தேங்காய் மண்டி உரிமையாளர் கோவிந்தராஜ், வியாபாரி சிவசக்தி ஆகியோர் கூறியதாவது:

கடந்த ஆண்டு தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்ததால், தற்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் தேங்காய் வாழப்பாடிக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு 39 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தேங்காய்கள் மட்டுமே கிடைத்தன.

வாழப்பாடி மண்டிகளில் இருந்து லாரிகள் மூலம் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தினமும் அனுப்பி வந்தோம். மூட்டைக்கு 80 தேங்காய்களைக் கொண்ட, 330 மூட்டை தேங்காய்களை லாரிகளில் விற்பனைக்கு அனுப்பி வைப்போம்.

இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், வட மாநிலங் களில் தேங்காய் விற்பனை வெகு வாக குறைந்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களாக மகாராஷ்டிராவுக்குதேங்காய் அனுப்ப முடியவில்லை. மற்ற மாநிலங் களிலும் 25 சதவீதம் அளவுக்கு மட்டுமே தேங்காய் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால், மொத்த விலையில், ஒரு தேங்காய்க்கு ரூ.5 வரை விலை குறைந்துள்ளது. ஒரு மண்டிக்கு 50 தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில், வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

தேக்கம் அடையும் தேங்காய் கள் காங்கேயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். ஏற்கெனவே, விளைச்சல் அதிகரிப் பினால் விலை குறைந்துள்ள நிலையில், தற்போது மேலும் குறைந்த விலைக்கு தேங்காய்களை எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொது ஊரடங்கு அமலுக்கு வந்தால் தேங்காய் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x