Published : 29 Apr 2021 06:00 PM
Last Updated : 29 Apr 2021 06:00 PM

கரோனா பரவிய 14 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது வேகமாகச் செயல்படுவதாகக் கூறுவது ஏன்?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து 14 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது துரிதமாகச் செயல்படுவதாகக் கூறுவது ஏன்? என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரெம்டெசிவிர், படுக்கை, வென்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களைக் காலையில் வழங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ரெம்டெசிவிர் விற்பனைக்கான மையங்களை மாநிலம் முழுவதும் கூடுதலாகத் திறக்க வேண்டும் என்றும், கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாக நேற்று செய்தி வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, மக்கள் நெருக்கத்தால் கரோனா பரவல் அதிகரிப்பதால், ரெம்டெசிவிர் விற்பனைக்கு நடமாடும் மையங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, தடுப்பூசி தயாரிப்பின் அளவை அதிகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, “கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது, இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள தற்போதைய நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்திச் செயல்படுகிறீர்கள்”? எனச் சுட்டிக்காட்டியது.

கரோனாவைத் தடுக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா பேரிடரின்போது, அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x