Published : 29 Apr 2021 05:48 PM
Last Updated : 29 Apr 2021 05:48 PM

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் நிலம் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்’’.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x