

புதுச்சேரியில் புதிதாக ஒரே நாளில் 1,122 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஏப்.29) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,727 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 940 பேருக்கும், காரைக்காலில் 101 பேருக்கும், ஏனாமில் 30 பேருக்கும், மாஹேவில் 51 பேருக்கும் என மொத்தம் 1,122 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 9 பேர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.38 ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 57 ஆயிரத்து 427 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 277 பேர், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 311 பேர், கோவிட் கேர் சென்டரில் 815 பேர் என 1,403 பேர், காரைக்காலில் 50 பேர், ஏனாமில் 204 பேர், மாஹேவில் 24 பேர் என 1,681 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 5,871 பேர், காரைக்காலில் 841 பேர், ஏனாமில் 298 பேர், மாஹேவில் 298 பேர் என 7,308 பேரும், மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,689 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இன்று 564 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 645 (82.97 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 7 லட்சத்து 86 ஆயிரத்து 995 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 94 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 910 பேருக்கு (2 டோஸ் உட்பட) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு சுகாதாரத் துறை தகவலில் கூறப்பட்டுள்ளது.