Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

தா.பழூர் அருகே அண்ணங்காரன்பேட்டையில் கற்பூர வெளிச்சத்தில் இரவு முழுவதும் வனபூஜை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அண்ணங்காரன்பேட்டை கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கற்பூர வெளிச்சத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறப்பு வனபூஜை நடைபெற்றது.

தா.பழூர் அருகேயுள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிஅய்யா கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றி துணை தெய்வங்களாக ஆகாயவீரன், பாதாளவீரன், நாச்சியார் அம்மன் மற்றும் குதிரை சிலைகள் உள்ளன. இக்கோயிலில் திங்கள்கிழமைகளில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று வனபூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 60 ஆண்டுகளில் 4 திங்கள்கிழமைகளில் மட்டுமே சித்ரா பவுர்ணமி வன பூஜை விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ஆண்கள், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு சித்ரா பவுர்ணமி திங்கள்கிழமை வந்ததால், இக்கோயிலில் வன பூஜை விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மறலாளிகள் (வகையறாக்கள்), கோயிலுக்கு பூஜைமணிகள், வீச்சரிவாள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கியும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். தற்போது, கரோனா தடுப்பு நடவடிக்கையால் குறைவான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர். விடிய விடிய கற்பூர வெளிச்சத்தில் மட்டும் இந்த விழா நடைபெற்றது. கற்பூர வெளிச்சத்திலேயே இந்த திருவிழா நடைபெறுவதால் இந்த கோயிலுக்கு மின் இணைப்பு பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x