Last Updated : 27 Apr, 2021 03:14 PM

 

Published : 27 Apr 2021 03:14 PM
Last Updated : 27 Apr 2021 03:14 PM

புதுச்சேரியில் புதிய உச்சம்; ஒரே நாளில் 1,021 பேருக்கு கரோனா: மேலும் 13 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,021 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (ஏப். 27) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 6,502 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 781 பேருக்கும், காரைக்காலில் 108 பேருக்கும், ஏனாமில் 73 பேருக்கும், மாஹேவில் 59 பேருக்கும் என மொத்தம் 1,021 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 1,522 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,306 பேர் என மொத்தம் 7,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக நீடிக்கிறது.

இன்றைய தினம் 690 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 448 (84.38 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 660 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 95 ஆயிரத்து 574 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 1 லட்சத்து 87 ஆயித்து 641 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x