Published : 27 Apr 2021 10:37 AM
Last Updated : 27 Apr 2021 10:37 AM

14 நாட்கள் ஊரடங்கு; கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவிட வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

கரோனா பரவல் காரணமாக 2 வாரம் முழு ஊரடங்குக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு, தமிழகம் திரும்புவோருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனையொட்டி கர்நாடக மாநில அரசு இன்று (27.04.2021) மாலை 6 மணி முதல் 14 நாட்கள் முழு முடக்கம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பெங்களூரு மாநகரிலும், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பெருமளவு தமிழகத்திற்கு வரும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி கர்நாடக மாநிலத்தில் தமிழகத்திற்கு வரும் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

கர்நாடக மாநில எல்லைக்குள் வாழ்ந்து வரும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளும், மருத்துவ பரிசோதனை உட்பட நோய்த்தடுப்பு மருந்துகளும் கிடைத்திட கர்நாடக மாநில அரசு மூலம் உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக தமிழக அரசு தனி அலுவலர் மற்றும் மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களை அரசு வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x