Published : 27 Apr 2021 06:07 AM
Last Updated : 27 Apr 2021 06:07 AM

கூவத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

கூவத்தூர் அருகே ஈசிஆர் சாலையில் விபத்துக்குள்ளாகி உருக்குலைந்து காணப்படும் தனியார் பேருந்து.

கல்பாக்கம்

கூவத்தூர் அருகே ஈசிஆர் சாலையில் தனியார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3 பெண்கள் உள்பட 5 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த இராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் கல்பாக்கம் அடுத்த ஆர்எம்ஐ நகரில் நடைபெற இருந்த சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியார் பேருந்தில் ஈசிஆர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று கூவத்தூர் அடுத்த காத்தான் கடை அருகே தனியார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தனியார் பேருந்தில் பயணித்த மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த அன்னபூரணி, அலமேலு, வேட்டவராயன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சாலையோரத்தில் இருந்த குடியிருப்பாளர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கூவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் அரசு பேருந்து ஓட்டுநர் ஐயப்பன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பின்னர், விபத்துக்குள்ளான பேருந்துகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x