Published : 20 Dec 2015 10:06 AM
Last Updated : 20 Dec 2015 10:06 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் நேற்று பகல் 12.30 மணிக்கு சந்தித்துப் பேசினர்.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்த நிலையில், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நின்று போயிருந்த தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து 3-வது அணியை பாஜக அமைத்தது. இக்கூட்டணிக்கு 19 சதவீத வாக்கு களும், 2 தொகுதிகளில் வெற்றியும் கிடைத்தன. அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய அணியை அமைத்துள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு வரவேண்டும் என தேமுதிக தலைவர் விஜய காந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு வைகோ உள்ளிட்டோர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அமித்ஷா ஆலோசனை
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர் பாக தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன்ராஜூலு, கேசவ விநாயகம், தமிழக பொறுப்பாளர்களான தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், இணை அமைப் புப் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அமைப்புப் பொதுச்செயலாளர் ராம்லால் ஆகி யோர் கடந்த 16-ம் தேதி டெல்லி யில் ஆலோசனை நடத்தினர்.
கடந்த மக்களவைத் தேர் தலைப்போல தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க முடியுமா? திமுக, அதிமுக தவிர வேறு எந்தெந்த கட்சிகளை கூட்டணிக் குள் கொண்டு வர முடியும் என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், மக்கள் நலக் கூட்டணியும் செய்துவரும் முயற்சி களை அமித்ஷாவிடம் எடுத்துக் கூறிய தமிழக தலைவர்கள், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே அவர் கூட்டணிக்கு வருவார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
அனைத்தையும் கேட்ட அவர், விஜயகாந்துடன் பேச்சு நடத்துமாறு கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே தமிழக பாஜக தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து தேமுதிக நிர்வாகிகள் சில ரிடம் கேட்டபோது, ‘‘விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராக உள்ளது. அது தொடர்பாக பேசவே பாஜக தலை வர்கள் வந்தனர்’’ என தெரி வித்தனர்.
விஜயகாந்தை சந்தித்தது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினோம். கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்த மாக விஜயகாந்தை சந்தித்துப் பேசி னோம். பொதுவான நடப்பு அரசி யல் நிலவரங்கள், வெள்ள நிவா ரணப் பணிகள். சட்டப்பேரவைத் தேர்தல் என பல விஷயங்கள் குறித்து நட்பு முறையில் பேசி னோம்’’ என்றார். தமிழிசை சவுந்தர ராஜன் கூறும்போது, ‘‘விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந் தித்து பொதுவான அரசியல் நில வரங்கள் குறித்து பேசினோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT