Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவிர்’ மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிர கரோனாதொற்று பாதிப்பால் ஆபத்தானநிலையில் உள்ள நோயாளிகளுக்கு போடப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனாலும் நோயாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. ‘ரெம்டெசிவிர்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகளும் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT