Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து படுக்கைகளும் நிரம்பின: புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவதி

கோப்புப் படம்

சென்னை

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பியதால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் உச்சத்தை அடைந்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தன. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மேலும் குறைந்து வந்தது.

இந்நிலையில், கரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. முதல் அலையைவிட 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலையில் சென்னையில் 30 ஆயிரம் பேர் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 30 சதவீதம் பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் தவிர எந்த வசதியும் இல்லாததால், திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு உரிய அவசர சிகிச்சைகளை கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் 32,807 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 21,535 படுக்கைகள் என 54,342 படுக்கைகள் உள்ளன. இதில் 25,386 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளன.

தமிழகத்தை பொருத்தவரையில் அரசு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான `ஆக்சிஜன் டேங்க்’ வசதி உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் வழியாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த முடியும். மருத்துவமனைகளில் படுக்கை வசதி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.

தற்போதைய சூழலில் 70 சதவீதம் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா கண்காணிப்பு மையங்களில் 35 ஆயிரம் படுக்கைள் உள்ளன. தொற்று பரவல் வேகம் காரணமாக இந்த எண்ணிக்கையை 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x