Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
குட்கா உரிமை மீறல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவைக்குள் கடந்த 2017-ல் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி நோட்டீஸை ரத்து செய்தது. இதில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரலாம் என 2020 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் 2-வது முறையாக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து
ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, அந்த நோட்டீஸையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
தற்போதும் பேரவை உரிமை குழு நீடிக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேரவை செயலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ‘‘இதே அரசு மீண்டும் அமைந்தால் நீடிக்கும்’’ என்றார். இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் மற்றும் கு.க.செல்வம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT