Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் - கோவிட் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்:நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான கோவிட் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கவும், கிடைக்கும் இடங்களில் எல்லாம் தடுப்பூசி வாங்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். இத்தடுப்பூசியை நமது நாட்டிலேயே தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் மட்டுமல்லாது ஏனைய 4 பொதுத் துறை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களை நேரில் சந்தித்து செங்கல்பட்டில் உள்ள ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து, இந்த நிறுவனத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஜனவரி 8-ம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இந்த தொழிற்சாலையை பார்வையிட்டபோது, நானும் அங்கு சென்று அவரைச் சந்தித்தேன். தொழிற்சாலையை முழுமையாகப் பார்வையிட்ட அமைச்சர், உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு இருப்பதைக் கண்டார். இந்த தொழிற்சாலைக்கு தேவையான நிதியை தருவதாக வாக்குறுதியும் அளித்தார்.

கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியை அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். இதுதான் மிகப் பிரதானமான கடமை என்றும் கருதுகிறேன். செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கத் தக்க அனைத்து திறனையும் பெற்றுள்ளது. தங்களுக்கு உள்ள கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்திலும் தாங்கள் கவனத்தை செலுத்தி இந்நிறுவனத்தை விரைவில் செயல்படுத்த உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x