Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒப்பந்த அடிப்படையில் 600 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து, ஜூன், ஜூலைமாதங்களில் உச்சத்தை அடைந்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தது.
இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஊரடங்கு உள்ளிட்டபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் பாதிப்பு, உயிரிழப்பு படிப்படியாக குறைந்தது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தொற்றின் தீவிரம் மேலும் குறைந்து வந்தது.
இந்நிலையில், கரோனா 2-வதுஅலை கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியது. முதல் அலையைவிட 2-வது அலை அதிவேகமாகபரவி வருகிறது. தினமும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக சென்னை மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் ஒப்பந்த அடிப்படையில் 600 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த ஆண்டுகரோனா தொற்று பரவலின்போது, ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், ஒப்பந்த அடிப்படையில் 600 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT