Published : 20 Apr 2021 03:16 AM
Last Updated : 20 Apr 2021 03:16 AM

ஆம்பூர் அருகே வெள்ளை நிற காக்கை: ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கும் மக்கள்

ஆம்பூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் வட்டமடிக்கும் அபூர்வ வகையான வெள்ளை நிற காக்கையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளை நிறம் கொண்ட காக்கை ஒன்று இரை தேடி அங்கும், இங்கும் பறந்து வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.

மிட்டாளம் குடியிருப்புப் பகுதிகளில் பறந்து திரியும் இந்த அபூர்வ வகையான காக்கையை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரிய வர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். சிலர் பழம், தானிய வகைகளை உணவாக வைத்து வெள்ளை நிற காக்கையை தங்கள் வீட்டின் அருகே வரவைக்க முயற்சி செய்தனர்.

ஆனால், வீட்டின் மேல் மாடியில் நின்றபடி இரையை தேடும் வெள்ளை நிற காக்கை அங்கும், இங்கும் பறந்தபடி கடந்த 2 நாட்களாக வட்டமடித்து வருகிறது. இதுவரை கருப்பு நிறத்திலேயே காக்கை பார்த்த சிறுவர்களுக்கு வெள்ளை நிறம் கொண்ட காக்கை அழகாக இருப்பதாக கூறி வெள்ளை காக்கை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் அன்பு செல்வத்திடம் கேட்டபோது, ‘‘பொதுவாக, மனிதர்கள், பறவைகள், விலங்குககள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களிலும் டி.என்.ஏ குறைபாட்டால் ‘அல்பினீசம்’ என்ற நோய் உண்டாகும். இது உடலில் உள்ள தோலின் நிறத்தை மாற்றும். அதேபோன்று தான் வெள்ளை நிற காக்கையும் டி.என்.ஏ குறைபாட்டால் நிறம் மாறியிருக்கும்.

மேலும், ‘மெலனின்’ குறைபாட்டினாலும் வெள்ளை நிறம் தோலில் ஏற்படும். இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளை நிறத்திலேயே காக்கைகள் காணப்படுகின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x