Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

தினமும் 1.63 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: 2 லட்சம் இலக்கை விரைவில் எட்ட சுகாதாரத் துறையினர் திட்டம்

தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒருநாளைக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால், பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி, நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி தொடங்கி, 4 நாட்களாக நடந்துவரும் தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 4 நாட்கள் நடக்கும் தடுப்பூசி திருவிழாவின்போது தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. தற்போது தினமும் சராசரியாக 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கேட்டபோது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆர்வத்துடன் வந்தவண்ணம் உள்ளதால் 2 லட்சம் என்ற இலக்கை தமிழகம் விரைவில் எட்டும்.

கோவேக்சின் முதல் தவணை போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணையும், கோவிஷீல்டு முதல் தவணை போட்டு 8 வாரத்துக்குள் 2-வது தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது. தற்போதைய நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x