Published : 13 Apr 2021 12:49 PM
Last Updated : 13 Apr 2021 12:49 PM

தமிழக ஓசூர் எல்லையில் இ-பாஸ் வாகன சோதனை; வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் தீவிரம்

தமிழக ஓசூர் எல்லை ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு இ-பாஸ் சோதனை மையம் | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

தமிழக ஓசூர் எல்லையில் உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே மீண்டும் கரோனா தடுப்பு வாகன சோதனை மற்றும் இ-பாஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் இ-பாஸ் சோதனை, உடல் வெப்பநிலைப் பரிசோதனை மற்றும் தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் புதிய விதிமுறைகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளன.

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைகளில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச்சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி விளங்குகிறது. இந்த சோதனைச்சாவடிக்கு தினமும் கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு நகர் வழியாகத் தமிழகத்துக்கு வருகின்றன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தமிழக எல்லை மூடப்பட்டது. முதல் முறையாக இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் முறையாக தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே இ-பாஸ் சோதனை மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறும்போது, ''இந்த சோதனைச்சாவடியில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மூன்று மாநிலங்களைத் தவிர கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு, தமிழகத்துக்குள் நுழைய அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்களில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மேலும் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

கிருமிநாசினி தெளிப்பு

ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ஓசூர் மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முகாம் அமைத்து வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் 24 மணி நேரமும் 15 மாநகராட்சி ஊழியர்கள் மூன்று ஷிப்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் எல்லையில் இயங்கி வரும் இந்த கரோனா தடுப்பு இ-பாஸ் கண்காணிப்பு மையத்தில் 24 மணி நேர வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x