Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரிடம் அத்துமீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மையங்களை வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் நேரில்பார்வையிடலாம். இதற்காக தேர்தல் ஆணையம் அவர்களுக்கு தனியாக அடையாள அட்டையும் கொடுத்துள்ளது. மையங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரிடம் இதை காண்பித்து, உள்ளே சென்று பார்வையிடலாம்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சின்னவேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த திமுக பிரமுகர்கள் 2 பேரிடம், அங்கு பணியில் இருந்தகாவல் உதவி ஆய்வாளர் ராணி,அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள், அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணி அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர்கள் அசோகன், தண்டபாணி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் உள்ளன. எனவே, அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். வாக்குஎண்ணும் மையத்தில் பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸாரிடம் அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட எஸ்.பி.க்கள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT