Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 15-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக 12-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியிலும், 13-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

14, 15-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 5 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 4 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மதுரையில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x