Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

மத்திய பாஜக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்: உரங்கள் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம்

உரங்களின் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உரங்களின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உர விலை உயர்வின் மூலம்,50 கிலோ டிஏபி உர மூட்டைவிலையை ரூ.1,200-ல் இருந்துரூ.1,900 ஆக செங்குத்தாக உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது.

போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுவதற்குக்கூட மனமில்லாத, மார்க்கம் தெரியாத, மனிதாபிமானமற்ற மத்திய பாஜக அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த டிஏபி உர விலை உயர்வைத் தொடர்ந்து என்பிகே உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

உரவிலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதன்பிறகு ‘உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது’ என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தை செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு.

ஏற்கெனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துவிட்டு, பிறகு திரும்பப்பெற்றது இந்த அரசு. இப்போதுஉர விலையை உயர்த்திவிட்டு, ‘இப்போது அமல்படுத்தமாட்டோம்’ என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது. தமிழகத்துக்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது உரங்களுக்கான மானியத்தை ரத்து செய்ததால் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துஉற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. உடனடியாக உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையை தீர்மானிக்கும் உரிமையை உர உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.

உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பாரிக் அமிலம் விலை பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு உரத்துக்கு அளித்து வந்த மானியத்தை குறைத்து விட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 சதவீதம் வரை உயர்த்தி விட்டன. இது கடும் கண்டனத்துக்கு உரியது. உடனடியாக உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x