Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
காவலர்கள் அனைவருக்கும் கரோனாதடுப்பூசி போடப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நரியங்காடு காவலர் குடியிருப்பில் நேற்றுநடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசும்போது, “இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்ற ஆண்டு கரோனா பரவலைத் தடுப்பதற்கு அனைத்து நிபுணர்களும் 3 விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள். முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது. இந்த வருடம் நம்மிடையே கரோனா தடுப்பூசி உள்ளது. கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன.
காவலர் குடியிருப்புகளில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். இதுவரை 6 ஆயிரம் காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT