Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
மெட்ரோ ரயில்களில் இன்று முதல் (ஏப். 11) முகக்கவசம் இல்லாமல் பயணித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கரோனா தொற்றில் இருந்து விடுபட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நேற்று முதல் அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முகக்கவசம் இல்லாமல் பொதுஇடங்களில் வருவோரிடம் ரூ.200 அபராதம் விதித்துக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகள் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் இல்லாமல் பயணித்தாலோ அல் லது முகக்கவசம் முறையாக அணியாமல் இருந்தாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், இன்று முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த உள்ளதாகவும், இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்புக் குழு அமைத்து, கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT