Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளாக நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாமா?- அறிக்கை தர தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழக பொருளாதார குற்றப்பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களை அதிகாரிகளாக நியமிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருதனியார் நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) திட்டங்களை வழங்கி வந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, எவ்வித முன்னறிவிப்புமின்றி 6 பரஸ்பர நிதி திட்டங்களை இந்நிறுவனம் பாதியில் முடித்துக்கொண்டதாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதன்மூலம், நாடு முழுவதும்3 லட்சத்து 15,621 முதலீட்டாளர்களிடம் ரூ.28 ஆயிரம் கோடியை இந்நிறுவனம் மோசடி செய்து விட்டதாகக் கூறி கோவையைச் சேர்ந்த பிரேம்நாத் சங்கர், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் இந்தநிறுவனத்துக்கு எதிராக போலீஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனக்கோரி பிரேம்நாத் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தநிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் பொருளாதார குற்றப் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற நபர்கள் இல்லை. இந்த பிரிவு தொடங்கியது முதல்தற்போது வரை எத்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கும் வகையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமிப்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x