Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

அதிமுக கூட்டணிக்கு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு: முதல்வர் பழனிசாமியை சந்தித்து அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் பழனிசாமியை, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, விவசாயிகள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள், சலுகைகளுக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

முதல்வர் பழனிசாமி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்துள்ளார். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டபோது அதற்கான நிவாரண நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டார். குடிமராமத்து திட்டம் மூலம் நீர் ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

விவசாயிகளின் நலனுக்காக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் ஆகியவற்றை முதல்வர் செயல்படுத்த வேண்டும். விவசாயியான முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும். எனவே, தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வருடனான சந்திப்பில் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிநீர் இணைப்பு கூட்டமைப்புத் தலைவர் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங் கத் தலைவர் பொன்னுவேல், தென்னை மற்றும் பனை பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈரோடு நல்லு சாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்ட மைப்புத் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x