Published : 03 Apr 2021 03:45 PM
Last Updated : 03 Apr 2021 03:45 PM

பல பேருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்: அண்ணாமலை

பல பேருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் செந்தில் பாலாஜி பயந்துவிட்டார் என்று அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைகூறும்போது, ''தொடர்ச்சியாக பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல், பிரச்சார வண்டிகள் மீதான தாக்குதலுக்கே நான் செந்தில் பாலாஜி குறித்து கருத்து கூறினேன். அராஜகம் செய்தால் என்ன நடக்கும் என்பது திமுகவுக்குத் தெரியும். அவர்கள் அராஜகம் செய்தால் நிச்சயம் பதிலடி அளிக்கப்படும். நாங்கள் அகிம்சைவாதியாகத்தான் இருப்போம். ஆனால், எங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. நாங்கள் ஆக்கபூர்வமாக மக்களுக்கான அரசியல் செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறோம்.

பல பேருக்குக் கொலை மிரட்டல் விடுத்த செந்தில் பாலாஜி, நான் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். செந்தில் பாலாஜி பயந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியைத் தாக்கிப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில கடந்த இரு நாட்களாக வைரலானது.

அதில், “திமுகவின் செந்தில் பாலாஜியைத் தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்" எனப் பேசினார்.

இப்பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), கொலை மிரட்டல் (506/1), தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x