Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

விஜயகாந்த் உழைப்பு வீணாகிவிட்டது: விஜயபிரபாகரன் ஆதங்கம்

பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: பல கட்சிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குகிறார்கள். விஜயகாந்த், டிடிவி.தினகரன் ஆகியோர் சுயமாக கட்சி ஆரம்பித்து சொந்தப் பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகின்றனர். ஆனால், தேமுதிகவுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள்? எல்லா இடத்திலும் திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைக்குது. ஆனால் அரசியலில் மட்டும் திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சில நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டை விற்றால் நிச்சயம் ஊழல் தான் நடக்கும்.

அதிமுகவுக்கு மாற்று திமுக என்பதை விட்டுவிட்டு தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுங்கள். இந்த மக்களை தங்கத் தட்டில் வைத்து தாங்க வேண்டும் என்று தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அப்பாவோட கனவை நினைவாக்கதான் நான் இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் சிந்திக்கிறீர்கள். ஆனால் ஓட்டுபோடும்போது மட்டும் முரசு சின்னத்துக்கு ஓட்டுபோட கை வர மறுக்கிறது. அப்போது மட்டும் இரட்டை இலை, உதய சூரியனுக்கு தான் ஓட்டு போடுகிறீர்கள்.

40 ஆண்டுகாலம் மக்களுக்காக விஜயகாந்த் செய்த உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறோம். உங்களது கஷ்டம் எங்களுக்கு தெரியும். நாங்கள் குடும்பத்துடன் மக்களுக்காக உழைக்க வந்துள்ளோம். அந்த உழைப்புக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x