Published : 01 Apr 2021 02:44 PM
Last Updated : 01 Apr 2021 02:44 PM

சர்ச்சைப் பேச்சு; ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து சமீபத்தில் மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீடு செய்து ஆ.ராசா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை, திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ''முதல்வரின் அம்மாவைப் பற்றிப் பேசியது தவறாகக் கொண்டு செல்லப்படுவதால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதல்வர் கண்கலங்கியதைப் பார்த்தேன். அதற்காக முதல்வரிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்'' என ஆ.ராசா தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று (மார்ச் 31), தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு ஆ.ராசா இடைக்கால பதில் அனுப்பினார். அதில், தான் நடத்தை விதிகளை மீறும் எந்தவொரு விஷயத்தையும், தரக்குறைவாகவோ, பெண்களின் தாய்மையின் கவுரவத்தைக் குறைக்கும் விதத்திலோ பேசவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், மு.க.ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமை குறித்து உவமானத்துடன் பேசியதாகத் தெரிவித்திருந்தார். மேலும், தான் தவறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படும் முழு உரையின் நகல், அதிமுக தேர்தல் ஆணையத்தில் மார்ச் 27 அன்று அளித்த புகார் நகல், எனது வழக்கறிஞருடன் விரிவான பதிலை பதிவு செய்யவும், தனிப்பட்ட விசாரணைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆ.ராசா கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த சர்ச்சைப் பேச்சு காரணமாக, ஆ.ராசா 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

48 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவை நீக்கியுள்ளது. மேலும், அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 4-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x