Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

அரசுப் பேருந்திலிருந்து விழுந்து நிரந்தர ஊனமடைந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி

அதிகவேகமாகச் சென்ற அரசுப்பேருந்திலிருந்து விழுந்து நிரந்தர ஊனமடைந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றுஅரசுப் பேருந்து ஜப்தி செய்யப் பட்டது.

கோவை உப்பிலிபாளை யத்தைச் சேர்ந்தவர் ஜெ.அருண் விக்னேஷ் (31). கோவை ஈச்சனாரி யில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 2011 ஜூலை 1-ம்தேதி கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்தில் பயணித்துள்ளார். கோவை-பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே பேருந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்தின்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால், பேருந்தின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அருண்விக்னேஷ் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவரின் தலையில் பலத்தகாயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அருண் விக்னேஷ் சரியாக பேச முடியாத நிலைக்கு ஆளானதால் அவரது தந்தை ஜெயபால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "விபத்தில் அருண் விக்னேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடக்கும்போது மனுதாரருக்கு 21 வயது. அவர் அப்போது எங்கும் பணிபுரியாவிட்டாலும், படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்றிருப்பார். அதன்மூலம் மாதம் ரூ.10 ஆயிரமாவது கிடைத்திருக்கும். கோவை அரசு மருத்துவமனையில் அருண் விக்னேஷை பரிசோதித்த மருத்துவர், 83 சதவீதம் ஊனம் ஏற்பட்டுள்ளதாக சான்று அளித்துள்ளார். எனவே, மருத்துவச் செலவுகள், வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றுக்காக மொத்தம் ரூ.69.94 லட்சத்தை 7.5 சதவீத வட்டியுடன் தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும்" என 2017-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து 2019-ம் ஆண்டு உத்தரவை நிறைவேற்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைவிசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி முனிராஜா, இழப்பீட்டுக்கு ஈடாக அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஒரு அரசுப் பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தீபக்குமார் கூறும்போது, “மொத்தம் 5 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்கப்படாதபட்சத்தில் ஜப்தி செய்யப்படும் பேருந்துகள் ஏலத்தில் விடப்பட்டு அந்த பணம் அருண் விக்னேஷின் குடும்பத்துக்கு அளிக்கப்படும்"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x