Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

படகு உரிமையாளர்கள் ஆவணங்களுடன் ஆஜராகாததால் தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி

படகின் உரிமையாளர்கள் ஆவ ணங்களுடன் ஆஜராகாததால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பயன் படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு தண்டனை, அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இதன் பிறகு இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

மீனவர்களின் போராட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீண்டும் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் படகை விடுவிக்க அதன் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் வழக்கு நடைபெறும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜரானால் படகுகளும் விடுவிக்கப்படு கின்றன. ஆனால் படகின் உரிமையாளர்கள் ஆஜரா கவில்லை என்றால் படகுகள் அரசுடமையாக்கப்படுகின்றன.

இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட மற்றும் அரசுடமையாக்கப்பட்ட படகுகள் யாழ்ப்பாணம் மாவட்டம் காரை நகர், கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த மீன்பிடி இறங்கு தளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன், இலங்கை மீனவர்களின் தொழி லும் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து மன்னார் மற்றும் ஊர்காவல் துறை நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன. அப்போது சேதமடைந்த தமிழகத்தின் 121 விசைப்படகுகளை அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கு நீதிமன்றங்கள் கடந்த ஆண்டு உத்தரவிட்டன.

இந்நிலையில் அரசுடமையாக் கப்பட்டு நல்ல நிலையில் உள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 2 விசைப் படகுகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தலா 2 விசைப்படகுகளை பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் மார்ச் 13-ம் தேதி இலங்கை கடற்படை கோரியது. இதற்கு ஊர்காவல் துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் நேற்று அனுமதி வழங்கி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x