Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விழிப்புணர்வுக்காக தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த மாணவர்

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் ஜெயந்த் ஜெய்பிரகாஷ் டபுள்

ராமேசுவரம்

ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் கல்லூரி மாணவர் ஜெயந்த் ஜெய்பிரகாஷ் டபுள் சுமார் 30 கி.மீ தூரம் கொண்ட தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.

நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ (FIT INDIA MISSION) என்ற திட்டத்தை பிரதமா் மோடி 2019 ஆகஸ்ட் மாதம் தொடக்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட பயிற்சிமுகாம்கள் நடத்தப்படுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் டபுள்- அர்ச்சனா தம்பதியின் மகன் ஜெயந்த் ஜெய்பிரகாஷ் டபுள் (18).

கல்லூரியில் முதலாம் ஆண்டு பயி லும் நீச்சல் வீரரான இவர் பாகீரதி நதியில் உலகின் மிக நீளமான 81 கி.மீ நீச்சல் போட்டி, குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த 36 கி.மீ. நீள கடல் நீச்சல் போட்டி மற்றும் கடந்த பிப்ரவரியில் கோவாவில் 52 கி.மீ நீள கடல் தூரத்தையும் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் ஃபிட் இந்தியா இயக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்தியா-இலங்கை இருநாட்டு அனுமதி கிடைத்த நிலையில், ராமேசு வரத்திலிருந்து ஒரு விசைப்படகு, ஒரு பைபர் படகில் ஜெயந்த் ஜெய்பிரகாஷ் டபுள் அவரது பயிற்சியாளர், மீனவர்கள் உள்ளிட்ட 11 பேர் குழுவினர் நேற்று முன்தினம் காலை புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று அதிகாலை 2.25 மணியளவில் தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கிய ஜெயந்த் ஜெய்பிரகாஷ் டபுள் காலை 11.45 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

சுமார் 30 கி.மீ. தூரத்தை சரியாக 9 மணி நேரம் 20 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார். இதன் மூலம் பாக். ஜலசந்தியை நீந்திக் கடந்த 14-வது நீச்சல் வீரர் இவர் ஆவார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்கு வந்த அவரை பெற்றோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x